வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரில் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடந்துள்ள நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்(ஐசிஎம்ஆர்) இணையதளத்தை முடக்க 6 ஆயிரம் முறை முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டில்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த நவ.,22ம் தேதியன்று இணையதள செயல்பாட்டில் தடங்கல் ஏற்பட்டு திடீரென சர்வர் முடங்கியது. விசாரணையில் எய்மஸ் இணையதள தகவல்களை சேகரிக்கும் கணினி, 'சர்வர் ' ஆகியவற்றை முடக்கும் விதமாக, 'ஹேக்கர்'கள் 'சைபர்' தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின.
எனினும், உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் ரான்சம்வேர் எனப்படும் வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வரில் பழுது ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இது தொடர்பாக தேசிய தகவல் மையம் ஆய்வு செய்தது. எய்ம்ஸ் சர்வர் முடங்கியதற்கு ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் தான் காரணம் என்பது உறுதியாகி உள்ளது என மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஐசிஎம்ஆர் அமைப்பின் இணையதளத்தையும் முடக்க கடுமையான முயற்சி நடந்துள்ளது. நவ.,30 முதல் இதுவரை 6 ஆயிரம் முறை முயற்சி நடந்துள்ளது. இது குறித்த ஆய்வில், ஹாங்காங்கில் இருந்து முயற்சி நடப்பது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில், இணையதளத்தில் உள்ள அதிக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் காரணமாக அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை என அந்த அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.