தேவகோட்டை : தேவகோட்டை அருகே மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார் செய்ததால் உடலை தோண்டி எடுத்து பிரதே பரிசோதனை செய்யப்பட்டது.
சிவகங்கைமாவட்டம் தேவகோட்டை அருகே கொடுங்காவயலை சேர்ந்த ஆசிர்வாதம் மகன் ஜெயபிரபு 36; லாரி ஓட்டி வந்தார். இவருக்கும் தீபா என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து 7 வயதில் மகன் உள்ளார். தீபா ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
காரைக்குடி பாண்டியன் நகரில் வசித்தனர். நவ.21 ல் ஜெயபிரபு திடீரென இறந்து விட்டார். கணவர் மாரடைப்பால் இறந்ததாக மனைவி, கணவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.
ஜெயபிரபு உடல் சொந்த ஊரான கொடுங்காவயலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ஜெயபிரபுவின் தந்தை ஆசிர்வாதம் தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காரைக்குடி ஏ.எஸ்.பி.யிடம் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து காரைக்குடி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.
உடல் தோண்டி எடுப்பு
இந்நிலையில் புதைக்கப்பட்ட ஜெயபிரபு உடலை நேற்று தாசில்தார் செல்வராணி, போலீசார் முன்னிலையில் தோண்டி எடுத்தனர். சிவகங்கை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தார்.
தந்தை ஆசிர்வாதம் கூறுகையில், ''மகனின் கழுத்தில் கோடு இருந்தது. தூக்கு போட்டது போல் இருந்தது. எனது பேரனும், மகன் துாக்கு போட்டதையும், யார் உடலை இறக்கினார்கள் என்ற விவரத்தை கூறினார்.
எனவே சந்தேகம் வந்தது. போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். பிரேத பரிசோதனை அறிக்கையை வந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.