ராமேஸ்வரம் : -ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் மூடைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மண்டபம் வேதாளை கடற்கரையில் நேற்று மாலை சுங்கத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமான மினி லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது டிரைவர் மற்றும் அவருடன் ஒருவர் தப்பி ஓடினர். மினி லாரியை சோதனை செய்த போது 2 டன் விரலி மஞ்சள்கள் மூடைகளில் இருந்தது. இலங்கைக்கு படகில் கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்து மினிலாரியுடன் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அங்கு கிலோ ரூ. 1500 க்கு விற்கப்படுகிறது. இதனால் பறிமுதல் செய்த மஞ்சளின் இலங்கை மதிப்பு ரூ. 30 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடத்தலில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.