சென்னை : 'கொடி நாளில் பெரும் தொகையை வசூலித்து தருவதில், தமிழகம் எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இந்த ஆண்டும், பெருமளவில் நிதி வழங்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
இல்லத்தை மறந்து, எல்லையோரத்தில் பல இன்னல்களை தாங்கி, நாட்டுப்பற்று என்ற நம்பிக்கையை மட்டும் இதயத்தில் ஏந்தி இருக்கும், முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் உன்னத திருநாள் கொடி நாள்.
நாட்டின் அனைத்து பகுதிகளையும் பத்திரப்படுத்தும் உத்தம செயலை, சமரசம் இன்றி, உயிரை துச்சமென மதித்து, சீருடைக்குள் தங்கள் எண்ண சிறகுகளை ஒதுக்கி, ஆசைகளை குறுக்கி, பகைவர்களை விரட்டும் ஒப்பற்ற செயலை படை வீரர்கள் மேற்கொள்கின்றனர். அவர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது, நம் மகத்தான கடமை.
படை வீரர்களின் இல்லத்தை பார்த்து கொள்ள, நாடே அணி திரண்டு நிற்கிறது என்ற நன்னம்பிக்கை ஒளி வீச, கொடி நாளுக்கு கொடுக்கும் கொடையே அத்தாட்சி. அது, படைவீரர்களின் குடும்பத்தினருக்கு பல வகைகளில் பயன்தரும்.
கொடி நாளில், பெரும் தொகையை வசூலித்து தருவதில், தமிழகம் எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இந்த ஆண்டும், பெருமளவில் நிதி வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.