சென்னை : தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் பிரிவு அலுவலர்களுக்கு, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து, நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்வது, விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்முதல் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
இதன் தலைமை அலுவலகம், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. அங்கு, தலைமை செயலகத்தில் பணிபுரியும், 40 பிரிவு அலுவலர்களுக்கு, நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
அதில், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் பிரபாகர் பங்கேற்று, வாணிப கழக செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இதில், வாணிப கழக அதிகாரிகளும் பங்கேற்றனர்.