கடலுார் : கடல் சீற்றமாக காணப்படுவதால், கடலுார் மீன வர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகி உள்ள 'மாண்டஸ்' புயல் காரணமாக, கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. புயல் காரணமாக பலத்த மழை, சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் இயல்பைவிட கடல் சீற்றம் நேற்று அதிகமாக இருந்தது. அதனால் தாழங்குடா, தேவனாம்பட்டினம், நல்லவாடு, துறைமுகம், தைக்கால் தோணித்துறை, ராசாபேட்டை, அக்கரைகோரி, பரங்கிப்பேட்டை, கிள்ளை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு நேற்று செல்லவில்லை.
கடலுார் பகுதி மீனவர்கள் தங்கள் படகுகளை, தேவனாம்பட்டினம் உப்பனாறு கரையில் பாதுகாப்பானஇடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.
மாவட்டத்தில் 302 விசைப்படகுகள், 4,575 பைபர்கள் படகுகள்கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால், கடலுார் உள்ளிட்ட மீன்பிடி தளங்கள் வெறிச்சோடி கிடந்தன.