சென்னை, : சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் இன்றி, விரிவாக்கப் பணிகளை மேற்கொண்ட, 'சன் பார்மா' நிறுவனத்துக்கு, 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகில், சன் பார்மா எனும் மருத்து தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது.
ஆலையில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என, சன் பார்மா நிறுவனத்துக்கு, 10.58 கோடி ரூபாய் அபராதம் விதித்து, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. சேதம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சன் பார்மா நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இம்மனு, நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சன் பார்மா நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிக்க இடைக்கால தடை விதித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உத்தரவிட்டனர்.