வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: ஹெல்மெட் அணியாத போலீசாரிடம் ரூ.1,000 அபராதம் வசூலிக்க உத்தரவிட்ட டி.ஜி.பி.,யின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
புதுச்சேரியில் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி நவ., 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் போலீசார் ரூ.1,000 அபராதம் வசூலித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு அபராதம் விதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவியது. அதனைத் தொடர்ந்து, இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். தவறினால், அபராதம் வசூலிக்கப்படும் என 'வாக்கி டாக்கி' மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. போலீசாரே ஹெல்மெட் அணியாமல் பலர் இருசக்கர மோட்டார் வாகனங்களை ஓட்டி வருவதை கண்ட டி.ஜி.பி, மனோஜ்குமார் லால், ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் நேற்று போலீஸ் தலைமையகத்திற்கு ஹெல்மெட் அணியாமல், இருசக்கர மோட்டார் வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட போலீசாரிடம், தலா ரூ.1,000 அபராதத்தை போக்குவரத்து போலீசார் வசூலித்தினர். டி.ஜி.பி.,மனோஜ்குமார் லாலின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.