நாமக்கல்: நாளை நடக்கும் பேச்சு வார்த்தையில், கோரிக்கைகளுக்கு தீர்வு காண போலீசார் வலியுறுத்தியதை அடுத்து, துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நாமக்கல்-மோகனுார் சாலையில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு, 80-க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த, 30 இரவு, 25-க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்தபடி, தினமும் ஊதியமாக, 620 ரூபாய் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., பிடித்தம் செய்ததற்கான கார்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் துவங்கினர்.
அவர்களின் இந்த போராட்டம், நேற்று, 7 வது நாளாக நீடித்தது. அங்கு வந்த, டி.எஸ்.பி., சங்கர், இன்ஸ்பெக்டர்
சங்கரபாண்டியன் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துாய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, 'நாளை நடக்கும் பேச்சு வார்த்தையில், உங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணுங்கள்.
தற்போது, போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும்' என, தெரிவித்தனர்.
அவற்றை ஏற்ற துாய்மை பணியாளர்கள், உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஒரு வாரமாக நடந்து வந்த உள்ளிருப்பு போராட்டம், நேற்று முடிவுக்கு வந்தது.