வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 15 ஆண்டுகளாக மாநகராட்சியை தன்வசப்படுத்தி இருந்த பா.ஜ.,விடம் இருந்து டில்லி மாநகராட்சியை ஆம்ஆத்மி கைப்பற்றியுள்ளது.
டில்லியில் 3 மாநகராட்சிகளும், மொத்தம் 272 வார்டுகளும் இருந்தன. இந்நிலையில் 3 மாநகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. அதன்படி வார்டுகளும் 250 ஆக சுருக்கப்பட்டன. இந்த நிலையில் 250 வார்டுகளுக்கான டில்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4ம் தேதி நடைபெற்றது.
அதில் 50.47 சதவீத ஓட்டுகளே பதிவானது. இதன் ஓட்டு எண்ணிக்கை இன்று (டிச.,7) நடந்தது. துவக்கத்தில் பா.ஜ., சற்று முன்னிலை வகித்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் ஆம்ஆத்மி கட்சி அதிக இடங்களில் முந்தி சென்றது.

ஓட்டு எண்ணிக்கை முடிவில்
ஆம் ஆத்மி கட்சி - 134 வார்டுகளிலும்
பா.ஜ., - 104 வார்டுகளிலும்
காங்கிரஸ் - 9 வார்டுகளிலும்
சுயேச்சைகள் - 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
பெரும்பான்மைக்கு தேவையான 126 இடங்களை விட ஆம்ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, டில்லி மாநகராட்சியை அக்கட்சி கைப்பற்றியது. இதன்மூலம் கடந்த 15 ஆண்டுகளாக டில்லி மாநகராட்சியை தன்வசம் வைத்திருந்த பா.ஜ.,விடம் இருந்து ஆம்ஆத்மி முதன்முறையாக கைப்பற்றியது.
டில்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியதை தொடர்ந்து, டில்லி முழுவதும் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.