தஞ்சாவூர் - தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் திருநங்கை உள்பட 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு அக்டோபர் மாதம் உடற்தகுதித் தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. இதில், தகுதி அடிப்படையில் 34 ஆண்கள், ஒரு பெண், ஒரு மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கை சிவன்யா) என மொத்தம் 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு எஸ்.பி., ரவளிப்ரியா பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை உதவி சரக தளபதி செந்தில்குமார், மண்டல தளபதி சுரேஷ், துணை மண்டல தளபதி மங்களேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேர்வு பெற்றவர்களுக்கு தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை (டிச.8) முதல் 45 நாள்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் திருநங்கை தேர்வு செய்யப்பட்டார் என்பது இதுவே முதல் முறை.