வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சி மேலிட தலைவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
அங்கு காங்., சார்பில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ., விலைக்கு வாங்கும் என்ற அச்சம் என்ற அச்சம் காரணமாக அவர்களை சத்தீஸ்கர் அழைத்து செல்லப்பட உள்ளதாகவும், இதற்காக பயணிகள் விமானம் தயார் நிலையில் உள்ளதாக தெரிகிறது.
ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், அக்கட்சி அங்கு ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்., அதிக இடங்களில் முன்னிலை என்ற தகவல் வெளியான உடன் மேலிட தலைவர்கள் அங்கு விரைந்துள்ளனர். அதில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேந்திர பாகெலும் ஒருவர்.
இதனிடையே, 'ஆபரேசன் லோடஸ்' என்ற பெயரில், தங்களது எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ., விலைக்கு வாங்கும் என்ற அச்சம் காங்., நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. தேர்தலில் முன்னிலையில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் வீட்டில் குவிந்துள்ளனர்.
அவர்கள் உட்பட வெற்றி பெறும் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் பாதுகாக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்கள் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஸ்கர் அல்லது ராஜஸ்தான் மாநிலம் அழைத்து செல்லப்படலாம் என தெரிகிறது. இதற்காக பயணிகள் விமானம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக பூபேந்திர பாகெல் கூறுகையில், கட்சியின் மேலிட பார்வையாளராக நான் ஹிமாச்சல பிரதேசம் செல்கிறேன். அவர்களை ராய்ப்பூர் அழைத்து வருவது குறித்து முடிவு செய்யவில்லை. அதேநேரத்தில் அவர்களை பாதுகாப்பாக ஒரே இடத்தில் தங்க வைக்க உள்ளோம். பா.ஜ., எதையும் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்., மூத்த தலைவர் விக்ரமாதித்யா சிங் கூறுகையில், பா.ஜ., எதை வேண்டுமானாலும் செய்யும் என்பதால், ஜனநாயகத்தை காக்க அனைத்தையும் செய்ய தயாராக உள்ளோம். முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து 5 ஆண்டுகள் ஆட்சி செய்வோம். முதல்வர் பதவிக்கான போட்டியில் பிரதீபா வீர்பத்ர சிங்கும் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.