வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 5 மாநிலங்களில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில், பீஹார் மற்றும் உ.பி.,யில் தலா ஒரு தொகுதிகளை பா.ஜ., வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி தலா ஒரு தொகுதியை தக்க வைத்து கொண்டது.
உ.பி.,
உ.பி.,யின் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ., ஆக இருந்த சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், அந்த தொகுதி காலியானது. இதனையடுத்து அங்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
இங்கு பா.ஜ., சார்பில் ஆகாஷ் சக்சேனாவும், சமாஜ்வாதி சார்பில் ஆசிம் ராஜாவும் களமிறங்கினர். சமாஜ்வாதியின் கோட்டையாக திகழ்ந்த இந்த தொகுதியை பா.ஜ., முதல்முறையாக கைப்பற்றியது. ஆகாஷ் சக்சேனா 33,702 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உ.பி.,யின் கதவுலி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ராஷ்ட்ரீய லோக்தள கட்சியின் மதன் பையா வெற்றி பெற்றார். பா.ஜ., வேட்பாளர் ராஜ்குமார் சைனியை 22,165 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பீஹார்
பீஹாரில் ஆளும் ஆர்ஜேடி கட்சியின் அனில் குமார் சகனி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த 5 ம் தேதி நடந்த தேர்தலில் பா.ஜ., சார்பில் கேதார் பிரசாத் குப்தாவும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மனோஜ் சிங் குஷ்வாகாவும் களமிறங்கினார். இந்த தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் 76,653 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஆளுங்கட்சி வேட்பாளர் 73, 008 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது.
ஒடிசா
ஒடிசாவின் பதம்பூர் தொகுதி எம்.எல்.ஏ., ஆக இருந்த அம்மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியின் பிஜய் ரஞ்சன் சிங் பரிகா காலமானதை தொடர்ந்து அந்த தொகுதியில் கடந்த 5 ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில், ஆளுங்கட்சி சார்பில் ரஞ்சன் சிங்கின் மகள் பர்சா சிங் பரிகா மொத்த ஓட்டுகளில் 57.80 சதவீதம் ஓட்டு பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் பிரதிப் புரோஹித்தை 38.252 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். அவருக்கு 1,09,879 ஓட்டுகள் கிடைத்தன. பா.ஜ., வேட்டாளருக்கு 71,627 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் சத்ய பூஷண் சாகுவுக்கு 3,365 ஓட்டுகளும் கிடைத்தன. இந்த தொகுதியில் மொத்தம் 2.05 லட்சம் ஓட்டுகள் பதிவாகியிருந்தது.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கரின் கன்கெர் மாவட்டத்தில் உள்ள பனுபிரதப்பூர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சாவித்ரி மாண்டவி வெற்றி பெற்றார். அவரது கணவர் மனோஜ் சிங் மாண்டவி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சர்தர்ஷகார் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அனில் சர்மா 26, 852 ஓட்டுகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் அசோக் குமாரை தோற்கடித்தார். வெற்றி பெற்றார்.