வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குஜராத் தேர்தலில் வரலாற்று வெற்றிக்காக கடினமாக உழைத்த பா.ஜ., தொண்டர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
குஜராத், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (டிச.,8) நடைபெற்றது. இதில் குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களில் வெற்றிப்பெற்றது. இதனால் அங்கு தொடர்ந்து 7வது முறையாக பா.ஜ., ஆட்சி அமைக்க இருக்கிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை:

குஜராத்: குஜராத்திற்கு நன்றி. இந்த அற்புதமான தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகுந்த உணர்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். மக்கள் வளர்ச்சிக்கான அரசியலை ஆதரித்துள்ளனர். குஜராத்தின் ஜனசக்திக்கு தலைவணங்குகிறேன். கடினமாக உழைத்த ஒவ்வொரு பா.ஜ., தொண்டர்களும் ஒரு சாம்பியன். நமது கட்சியின் உண்மையான பலமாக விளங்கும் தொண்டர்களின் அதீத உழைப்பின்றி இந்த வரலாற்று வெற்றி சாத்தியமாகி இருக்காது.
ஹிமாச்சல பிரதேசம்: பா.ஜ., மீதான பாசத்திற்கும் ஆதரவிற்கும் ஹிமாச்சல பிரதேச மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் விருப்பங்களை நிறைவேற்றவும், மக்கள் பிரச்னைகளை இனிவரும் காலங்களில் எழுப்பவும் தொடர்ந்து பாடுபடுவோம்.