வங்கக் கடலில் உருவான, 'மாண்டஸ்' புயல் காரணமாக, நேற்று சென்னையில் வானிலை மோசமாக இருந்தது. சாரல் மழையுடன் பலத்த காற்றும் நேற்று வீசியது.
இதன் காரணமாக, சென்னைக்கு வர வேண்டிய மற்றும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய ஆறு விமான சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
இதன்படி, சென்னையில் இருந்து துாத்துக்குடி, ஷீரடி செல்லும் விமானம் மற்றும் அங்கிருந்து சென்னை வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து, மங்களூரு செல்ல வேண்டிய விமானமும், அங்கிருந்து சென்னை வர வேண்டிய விமான சேவையும் ரத்து செய்யப்பட்டன.
இதுதவிர, சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகள் மற்றும் நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
புயல் காரணமாக, விமான சேவைகள் ரத்து மற்றும் தாமதங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.