ஈரோடு, டிச. 9-
கொடுமுடி அருகே கருதிபாளையம், பழவள்ளி காட்டை சேர்ந்த பழனிச்சாமி மகன் சந்தோஷ், 24; ஆடுகள் மேய்க்க நேற்று முன்தினம் காலை சென்றார். மாலையில் ஆடுகள் மட்டும் வந்தன.
ஆனால், சந்தோஷ் வீடு திரும்பவில்லை. இதனால் அவரின் தாய் சரஸ்வதி, மொபைல்போனில் தொடர்பு கொண்டும், அவர் எடுக்கவில்லை. இதனால் ஆடு மேய்க்கும் இடங்களுக்கு சென்று பார்த்தார்.
அதேசமயம் மொபைல் போனை தொடர்பு கொண்டபடி இருந்தார். அங்கு பாறைக்குழி பகுதியில், சந்தோஷின் சட்டை, லுங்கி, செருப்பு, மொபைல் போன் இருந்தது.
நீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், கொடுமுடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். கொடுமுடி தீயணைப்பு துறையினர் தேடியபோது, சந்தோஷின் உடலை மீட்டனர்.
கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா? என்று, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.