உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான் உட்பட, 20 நாடுகள் இடம் பெற்ற கூட்டமைப்பான, 'ஜி - -20'ன் உச்சி மாநாடு, சமீபத்தில் இந்தோனேஷியா நாட்டில் உள்ள பாலி தீவில் நடைபெற்றது.
![]()
|
நம் நாட்டுக்கும், நம் பாரத பிரதமருக்கும் இப்படியொரு பெருமையும், பொறுப்பும் கிட்டியுள்ளதற்காக, அரசியல் கட்சிகள் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.
ஆனால், இதுவரை தங்கள் கட்சிக்கு கிட்டாத பேரும், புகழும், பிரதமர் நரேந்திர மோடிக்கு கிட்டுவதா என்ற வயிற்றெரிச்சலில், பொறாமையில் உள்ளனர் காங்கிரஸ் கட்சியினர். காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷோ, ஜி - 20 அமைப்புக்கு தலைமை வகிப்பது சுழற்சி முறையில் வழங்கப்படும் வாய்ப்பு. இந்தியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பது தவிர்க்க முடியாதது. இதற்கு முன், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, தென் கொரியா உட்பட பல்வேறு நாடுகள், இந்த அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளன. ஆனால், பிரதமர் மோடி அளவுக்கு, எந்த நாடும் இந்த வாய்ப்பின் வாயிலாக, மிகப் பெரிய அரசியல் நாடகமாடவில்லை' என்று குமுறி கொந்தளித்திருக்கிறார்.
![]()
|
ஆட்சி அதிகாரத்தில், 50 ஆண்டுகள் இருந்த போதிலும், பொருளாதார சிக்கல்களை களைய சிறு துரும்பை கூட கிள்ளி போட முனையாதது காங்கிரஸ் கட்சி. இத்தனைக்கும் பொருளாதார புலிகள் பலரை தன்னகத்தே கொண்டிருந்த கட்சி அது; அதிலும், ஒரு பொருளாதார புலி, 10 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமர் பதவியில் அமர்ந்து இருந்தார்.
அவர் புலி அல்ல... வெறும் புள்ளி தான் என்று, 20 நாடுகளுக்கும் தெரிந்திருந்ததால் தான், ஜி- - 20 மாநாட்டை நடத்தும் பொறுப்பு இந்தியாவிடம் வழங்கப்படவில்லை. இப்போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறந்து இருக்கிறது; நடத்தச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கின்றனர்.இதில், அங்கலாய்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, ஜெய்ராம் ரமேஷ் அவர்களே... உங்கள் வயிற்றெரிச்சலை இப்படியா வெளிச்சம் போட்டு காட்டிக் கொள்வது?