வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, ‛நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமைக்கொள்கிறேன்' எனப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
சமூக நீதி பேசும் திமுக.,வினர் ஹிந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதையோ, ஹிந்து மத நம்பிக்கையை பின்பற்றுவதையோ செய்வதே இல்லை. இது திமுக தலைவராக இருந்த அண்ணாதுரை, கருணாநிதி முதல் தற்போதைய ஸ்டாலின் வரை அனைவரும் ஹிந்து பண்டிகையை தவிர்த்து கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமியர்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதி, கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, தான் ஒரு கிறிஸ்தவன் என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மண்ணடி, பிரகாசம் சாலையில் அமைந்துள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு திமுக சார்பில் 2,000 பேருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, பொது மக்களுக்கு புத்தாடைகள், உணவு பொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: சிலருக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இதற்கு நான் பதில் தருகிறேன். இந்து அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு இப்போது அங்கு அல்லேலூயா எனக் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வது தான் திராவிட மாடல் ஆட்சியாகும்.
அவர் எப்போதுமே மாலையும் கழுத்துமாகத் தான் இருப்பார். அதே நேரம் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார். இதற்குப் பெயர் தான் சமூக நிதி ஆட்சி. இதைத் தான் ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன் எங்களுக்கு கற்றுக் கொடுத்தது. இத்தகைய ஆட்சியைத் தான் இப்போது முதல்வர் ஸ்டாலினும் நடத்தி வருகிறார்.

இன்னுமே சொல்லப்போனால், நானும் ஒரு கிறிஸ்துவன் தான். கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். சேகர்பாபு அல்லேலுயானு சொல்கிறார்.. உதயநிதி கிறிஸ்தவனு சொல்கிறார் என்று சிலருக்கு நிச்சயம் வயிறு எரியவே செய்யும்..
நான் இஸ்லாமியரும் கூட. நான் படித்தது எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளி, கல்லூரியும் லயோலா கல்லூரியில் தான் படித்தேன். அதேபோல நான் காதலித்து மணந்ததும் கிறிஸ்துவ மத்தை சேர்ந்தவர் தான். எனவே அந்த உரிமையில் இங்கே வந்து பேசுகிறேன். இவ்வாறு உதயநிதி பேசியிருந்தார்.
சமூக நீதி பேசும் திமுக.,வை சேர்ந்த அமைச்சர் உதயநிதி, தன்னை கிறிஸ்தவர், இஸ்லாமியர் என சொல்லும் அதேநேரத்தில், நான் ஹிந்து என மட்டும் சொல்லாமல் இருந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.