சென்னை: 18ம் ஆண்டு சுனாமி தினம் நினைவு நாளையொட்டி, சென்னை, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்ளின் உயிரிழந்தவரின் குடும்பத்தின் உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

2004 டிச., 26ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து எழும்பிய ஆழிப் பேரலைகள் இந்தோனேஷியா, இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் கடலோர பகுதிகளை வாரி சுருட்டியது.
சோகம்:
உயிர் சேதத்துடன், கோடிக் கணக்கில் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு முன் சுனாமி என்ற வார்த்தையை இந்தியர்கள் கேள்விப்பட்டதில்லை. 'கடல் அலை' ஊருக்குள் வந்த போது தான் 'சுனாமி' என தெரிந்தது. இதன் கோபம் வெறும் பத்து நிமிடம் தான். அது ஏற்படுத்திய சோகம் என்றும் அழியதில்லை.
ஏற்படும் விதம்
'சுனாமி' என்பது ஜப்பானிய மொழி சொல். 'துறைமுக அலை' எனப் பொருள். 'ஆழிப்பேரலை' எனவும் அழைக்கப்படுகிறது. நிலநடுக்கம் மூன்று விதங்களில் ஏற்படுகிறது. தரைப்பகுதியில் ஏற்படும் போது, நிலம் பிளவுபட்டு கட்டடங்கள் தரைமட்டமாகின்றன. மலைப்பகுதியில் ஏற்படும்போது எரிமலை உருவாகிறது. இதுவே கடலில் நிலநடுக்கம் ஏற்படும் போது, 'சுனாமி' எனும் ஆழிப்பேரலை உருவாகிறது.
நினைவு தினம்:
இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரியை 'சுனாமி' தாக்கியது. 12,000 பேர் பலியாகினர். இதில் 7,000 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை, கடலுார், கன்னியாகுமரி பாதிக்கப்பட்டன. இதன் தாக்கம் இன்றும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை. இதன் நினைவு தினம் இன்று(டிச.,26) அனுசரிக்கப்படுகிறது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆழிப் பேரலையின் தாக்குதலில், உயிர் நீத்த தங்களது உறவினர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

திருமுல்லைவாசல் கிராமத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் .
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கடலில் மலர் தூவியும் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், சென்னை, கன்னியாகுமரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்ளின் உயிரிழந்தவரின் குடும்பத்தின் உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.