வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'ஆதிதிராவிடர் நலனுக்கு ஒதுக்கிய நிதியை முழுதும் பயன்படுத்தாமல் இருப்பது, தி.மு.க., அரசின் மெத்தனத்தையும், பின் தங்கியிருக்கும் மாணவர்கள் மீதான அலட்சிய போக்கையும் காட்டுகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சமூகத்தில் பின் தங்கிய வகுப்புகளில் இருக்கும் மாணவர்களில், 100க்கும் மேற்பட்டோர், எப்படியாவது சமூகத்தில் முன்னேறிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்க ஆண்டுதோறும் சென்னை வருகின்றனர்.
அவர்கள், தமிழக அரசின் ஆதிதிராவிட நல துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், அடிப்படை வசதிக்கே போராட வேண்டிய அவல நிலை உள்ளது.
வசதிகள் இல்லை
கடந்த மழை காலத்தில், மழை நீர், விடுதியின் உள்ளே புகுந்ததால், மாணவர்கள் துாங்க இடம் இல்லாமலும், நோய் தொற்றுக்கும் உள்ளாகினர்.
விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டில், போர்வை, தலையணை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படவில்லை.
துறையின் சார்பில், 33 நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில், 20 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
![]()
|
போலி வேஷம்
கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் நலனுக்கு ஒதுக்கப்பட்ட, 4,099 கோடி ரூபாய் நிதியை வீணடித்துள்ளனர்; ஊழியர்களுக்கு மட்டும், 757 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
ஆனால், விடுதிக்கு செலவிடாதது ஏன் என்ற கேள்விக்கு, தி.மு.க., அரசு பதில் அளிக்க வேண்டும்.
ஒதுக்கிய நிதியை முழுதும் பயன்படுத்தாமல் இருப்பது, அரசின் மெத்தனத்தையும், சமூகத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்கள் மீதான கடும் அலட்சிய போக்கையும் காட்டுகிறது.
ஆனால், அரசியல் மேடைகளில் சமூக நீதி நாடகத்தை அரங்கேற்றுவது, தி.மு.க.,வின் போலி வேஷத்தையே வெளிப்படுத்துகிறது.
எனவே, அரசு, ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, உடனே மீண்டும் துறைக்கு வழங்கி, மாணவர்களின் அடிப்படை தேவைகளையும், கல்வி, நுாலகம் உள்ளிட்ட இதர பணிகளையும் உடனே மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.