வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான அரசு பங்களாவை, தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்த பதிவு அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் வாயிலாக பதிவாகும் மோசடி பத்திரங்களை, மாவட்ட பதிவாளர் ரத்து செய்யும் வகையில், சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.
அரசு, வக்பு வாரியம், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், நீர் நிலைகளை பதிவு செய்வதும் தடை செய்யப்பட்டு உள்ளது.
அரசின் சட்டத் திருத்தத்துக்கு, சார் - பதிவாளர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் சார் பதிவாளர் அலுவலகத்தில், கடந்த மாதம் ஒரு சொத்து விற்பனை பத்திரம் பதிவானது.
அதன் மதிப்பில் சந்தேகம் வந்ததால், துணை கலெக்டர் ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
![]()
|
துணை கலெக்டர் ஆய்வுக்கு சென்றபோது, பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட சொத்து, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சப் - கலெக்டர் பங்களா என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து, துணை கலெக்டர், பதிவுத்துறை உயரதிகாரிகளிடம் புகார் செய்தார்.
பத்திரத்தை பதிவு செய்த பொறுப்பு சார் - பதிவாளர் கதிரவனை, தற்காலிக பணி நீக்கம் செய்து, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசு சட்டத்தை திருத்தி உரிய வழிமுறைகளை வகுத்தாலும், மோசடி பத்திரங்களை பதிவு செய்வதில், சார் - பதிவாளர்கள் அடாவடியாக நடக்கின்றனர்.
அரசு சொத்தை தனியாருக்கு மாற்றும் பத்திரத்தை ஆரம்பத்திலேயே நிராகரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளித்து இருக்க வேண்டும்.
அதைவிடுத்து, அந்த பத்திரத்தை பதிவு செய்து, அதை மேல் நடவடிக்கைக்கு அனுப்பும் அளவுக்கு சென்று இருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற பதிவாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.