வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக கவர்னர் மாளிகையில் வரும் 12ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு கவர்னர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். அதில், தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து 'தமிழக கவர்னர்' என குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழக அரசின் முத்திரையும் அதில் இடம்பெறவில்லை.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று (ஜன.,09) கவர்னர் உரையுடன் துவங்கியது. சட்டசபையில் இதுவரை இல்லாத நிகழ்வாக, அரசு தயாரித்து அளித்த உரையை முழுமையாக படிப்பதை, கவர்னர் ரவி தவிர்த்தார். அவர் ஆட்சேபம் தெரிவித்த கருத்துகளை, உரையில் இருந்து நீக்க மறுத்ததால், இப்படி, 'நோஸ்கட்' செய்தார்.
அதிர்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின் சபை விதிகளை தளர்த்தி, கவர்னருக்கு எதிராக அவசர தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதையடுத்து கோபமடைந்த கவர்னர் ரவி, கூட்டம் முடிவதற்கு முன்பாகவே, சபையில் இருந்து வேகமாக வெளியேறினார்.

இந்நிலையில், வரும் 12ம் தேதி ராஜ்பவனில் பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், பங்கேற்க வரும்படி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கவர்னர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்ததுடன், 'தமிழக ஆளுநர் ' என குறிப்பிட்டு, தமிழக அரசின் லட்சினையையும் தவிர்த்துள்ளார். ஆனால், இந்திய அரசின் லட்சினை இடம்பெற்றுள்ளது. சென்ற ஆண்டு சித்திரை திருவிழாவின் போது, அனுப்பப்பட்ட அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை கவர்னர் பயன்படுத்தி உள்ளார்.