புதுடில்லி :நடப்பு நிதியாண்டில், ஜனவரி 10ம் தேதி வரையிலான காலத்தில், நாட்டின் மொத்த நேரடி வரி வசூல் 24.58 சதவீதம் உயர்ந்து, 14.71 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தனிநபர் வருமான வரி வசூல் அதிகரிப்பால், இந்த உயர்வு ஏற்பட்டிருப்பதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.
'ரீபண்டு' வழங்கிய பிறகு, நிகர நேரடி வரி வசூல் 12.31 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் நிகர வசூலை விட, 19.55 சதவீதம் அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில், தற்போதைய நிலவரப்படி, நிகர வசூல் 86.68 சதவீதமாகும். இந்த நிதியாண்டில், நேரடி வரி வசூல் 14.20 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
மொத்த வரி வசூல் அடிப்படையில், கார்ப்பரேட் வருமான வரி வசூல் 19.72 சதவீதமும், தனிநபர் வருமான வரி 30.46 சதவீதமும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, நடப்பு ஆண்டு ஜனவரி 10ம் தேதி வரையிலான காலத்தில், மொத்தம் 2.40 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டு உள்ளது.
இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வழங்கப்பட்டதை விட 58.74 சதவீதம் அதிகமாகும்.