செங்கல்பட்டு:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் சார்பில், ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு, வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தற்போது, பெருகிவரும் வேலை வாய்ப்பு சந்தையில், வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளை பெறும் வகையில், மேற்கண்ட இளைஞர்களுக்கு, புகழ்பெற்ற தனியார் வங்கியுடன் இணைந்து, கணக்கு நிர்வாகப் பணிக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில், 22 முதல் 33 வயது வரை உள்ளவர்கள், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் விண்ணபிக்கலாம். இப்பயிற்சி, 20 நாட்கள் நடத்தப்படுகிறது.
சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில், தங்கி படிக்கும் வசதிகள் செய்து தரப்படும். இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் பட்சத்தில், நிறுவனத்தில் நடத்தப்படும் பயிற்சி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு, வங்கி நிதி சேவை காப்பீடு, அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
வேலை வாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும். இப்பணியில், ஆரம்ப கால மாத சம்பளமாக 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை பெறலாம். பயிற்சிக்கான மொத்த செலவையும், தாட்கோ வழங்கும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.