தென்காசி:தென்காசி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை கலெக்டர் ஆகாஷ் வெளிப்படையாக அறிவித்தார். இதன் மூலம் தி.மு.க. மாவட்ட செயலாளர் அலப்பறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் ( தலையாரி ) ரேஷன் கடை விற்பனையாளர் பணிகளுக்கான ஆள்தேர்வு மாவட்ட வாரியாக நடந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் 53 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு தாலுகா அளவிலும் தேர்வு பெற்றவர்களின் பட்டியலை நேற்று தென்காசி கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டார்.
இந்நிலையில் தென்காசியில் சில தினங்களுக்கு முன் நடந்த தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கிராம உதவியாளர் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு தி.மு.க.வின் ஒன்றிய செயலாளர் நகரச் செயலாளர் கிளை செயலாளர்களுக்கும் ஒரு பதவி வீதம் வழங்கப்பட்டுள்ளது என்றார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள் அரசின் நம்பகத்தன்மையை சந்தேகப்பட்டனர்.
இது குறித்து முதல்வர் தலையிட வேண்டும் என பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். தென்காசியில் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் பொறுப்பு அமைச்சரான வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் கை ஓங்கி உள்ளது. எனவே தி.மு.க.வினருக்கு பணி வழங்கப்படுமோ என எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று கலெக்டர் வெளியிட்ட பட்டியல் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையாகவும் இருந்தது.
தேர்வில் அனைத்து காட்சிகளும் வீடியோ பதிவுகள் செய்யப்பட்டிருந்தன. இப்பணிக்கு தேர்வான பட்டியல் இம்மாவட்டத்தில்தான் முதலில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.