சிவகாசி-சிவகாசி தட்டாவூரணி பகுதியில் குழாய் பதிக்கப்பட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் மாநகராட்சி வாகனம் மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசியிலிருக்கு விளாம்பட்டி செல்லும் ரோட்டில் 48 வது வார்டுக்கு உட்பட்ட தட்டாவூரணியில் 150 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் குழாய் இணைப்பு கொடுக்கப்படாத நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டது. புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டது. ஆனால் இதுவரையிலும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. கட்டப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாட்டில் இல்லை. இதனால் இப்பகுதியினருக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மாநகராட்சி வாகனம் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது.
நீண்ட நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கிடைப்பதால், குடிநீரை பிடிக்க, ஒரே நேரத்தில் 500 க்கும் மேற்பட்ட குடங்களுடன் மக்கள் வருவதால் அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது.
மேலும் குடிநீரும் போதுமான அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாக உள்ளது. எனவே இப்பகுதிக்கு குழாய் இணைப்பு, தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.