தொண்டாமுத்தூர் : ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில், விளையாட்டு போட்டிகள் மூலமாக, மண்வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கிராமப்புற இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, 400 இளம் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்றனர். ஆண்களுக்கான வாலிபால் போட்டியில், 29 அணிகளும், பெண்களுக்கான த்ரோபால் போட்டியில், 8 அணிகளும் பங்கேற்றன.
கடந்த 8ம் தேதி நடந்த, வாலிபால் இறுதி போட்டியில், மத்வராயபுரம் அணி முதல் இடத்தையும், தேவராயபுரம் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றது.
பெண்களுக்கான த்ரோபால் இறுதி போட்டியில், புள்ளாகவுண்டன்புதூர் அணி முதலிடத்தையும், தேவராயபுரம் அணி இரண்டாம் இடத்தையும் தட்டிச் சென்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சதானந்தம் கோப்பை மற்றும் பரிசு தொகை வழங்கி பாராட்டினார்.