திருப்பூர், : இத்தாலி மற்றும் ஜெர்மனியில் நடக்கும் வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சிகளளில், இரட்டிப்பு வர்த்தக வாய்ப்புகளை கவர முடியுமென, ஏ.இ.பி.சி., அழைப்புவிடுத்துள்ளது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில், வெளிநாடுகளில் வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வர்த்தக வாய்ப்புகளை பெற வசதியாக, வெளிநாடுகளில் நடக்கும் ஜவுளி கண்காட்சிகளில், இந்திய ஏற்றுமதியாளர் பங்கேற்கவும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஜெர்மனி மற்றும் இத்தாலியில் நடக்கும் வர்ததகர்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்று, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், தங்கள் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்தலாம் என, ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.
இத்தாலி ஏற்றுமதி 2.14 சதவீதம்
இத்தாலியில் உள்ள, மிலன் நகரில், மார்ச் 23, 24 ம் தேதிகளில், வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இத்தாலியின் மொத்த இறக்குமதியில், இந்தியாவின் பங்களிப்பு, 2.14 சதவீதமாக இருக்கிறது. ஆண்கள் அதிகம் விரும்பி அணியும் ஆடைகள், திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகிறது.
பல்வேறு நாடுகளில் இருந்து, 2021ம் ஆண்டு, ஒரு லட்சத்து, 29 ஆயிரத்து, 464 கோடி ரூபாய் அளவுக்கு, இத்தாலியின் ஆயத்த ஆடை இறக்குமதி நடந்துள்ளது. அதில், இந்தியாவில் இருந்து மட்டும், 2,769 கோடி ரூபாய் அளவுக்கு, ஆடைகள் இறக்குமதியாகியுள்ளன.
ஜெர்மனி வாய்ப்பு பிரகாசம்
ஜெர்மனியின் பெர்லின் நகரில், மார்ச் 28, 29 ம் தேதிகளில், வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. அந்நாட்டின் ஆயத்த ஆடை இறக்குமதியில், இந்தியாவின் பங்களிப்பு 4 சதவீதமாக உள்ளது.
உலகில் மிகப்பெரிய ஜவுளி இறக்குமதி நாடுகள் வரிசையில், இரண்டாவது இடத்தில் உள்ள ஜெர்மனியில் நடக்கும், வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சி, ஏற்றுமதி வர்த்தகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
இந்தியாவின் ஜெர்மனி ஏற்றுமதி, கடந்த மூன்று ஆண்டுகளில் வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த, 2019ம் ஆண்டில், மூன்று லட்சத்து, 11 ஆயிரத்து, 648 கோடி ரூபாயாக இருந்த இந்திய ஏற்றுமதி, 2021ல், மூன்று லட்சத்து, 34 ஆயிரத்து, 824 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது; இது, மேலும் உயர வாய்ப்புள்ளது.
ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் கூறுகையில், 'இத்தாலி மற்றும் ஜெர்மனி நாடு களில் நடக்கும், வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது, திருப்பூருக்கு கூடுத லான ஆயத்த ஆடை ஏற்றுமதி வாய்ப்புகளை வாரி வழங்கும். எனவே, அடுத்தடுத்து நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம், 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்பது போல், இரட்டிப்பு வாய்ப்புகளை கவர முடியும். மேலும் விவரங்களுக்கு, 0421 2232634, 99441 81001 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்,' என்றனர்.
கடந்த, 2019ம் ஆண்டில், மூன்று லட்சத்து, 11 ஆயிரத்து, 648 கோடி ரூபாயாக இருந்த இந்திய ஏற்றுமதி, 2021ல், மூன்று லட்சத்து, 34 ஆயிரத்து, 824 கோடி ரூபாயாக
உயர்ந்துள்ளது.