திருக்கோஷ்டியூர்--திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடந்த அத்யயன உற்ஸவம் நிறைவடைந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அத்யயன உத்ஸவம் நடைபெறும். பகல் பத்து உத்ஸவத்துடன் டிச.23 ல் துவங்கியது. தினசரி மாலையில் பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி பூஜை நடந்தது.
ஜன.2 இரவில் வைகுண்ட ஏகாதசி உத்ஸவத்தன்று பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பரமபதவாசல் கடந்தார். தொடர்ந்து ராப்பத்து உத்ஸவம் துவங்கியது. தினசரி மாலையில் பெருமாள் சொர்க்கவாசல் எழுந்தருளல் நடைபெற்றது.
நேற்று காலை 10:00 மணி அளவில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் புறப்பாடாகி தாயார் சன்னதி எழுந்தருளினார். தொடர்ந்து பரமபத வாசல் கடந்தார். பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஏகாதசி மண்டபம் எழுந்தருளி பத்தி உலாத்துதல் நடந்தது. இரவு 7:00 மணிக்கு நம்மாழ்வார் திருவடி தொழுதல் நடந்தது. நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் வைபவம் நிகழ்ந்தது. ஆழ்வார் இருக்கை சேர்ந்த பின்னர் அரண்மனை மண்டகப்படியை முன்னிட்டு பரிவட்டம், மரியாதைகள் வழங்கப்பட்டது. கோஷ்டி பிரபந்தத்துடன் உத்ஸவம் நிறைவடைந்தது.