தேனி- -கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில், பதிவு செய்த தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தொழிலாளர் நலவாரிய உதவி கமிஷனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து 3 ஆண்டுகள் பதிவு மூப்பு பெற்ற தொழிலாளர்கள் இப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்கத் தெரிந்திருப்பது அவசியம். ஐந்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., படித்தவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருப்பது அவசியம். பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம். எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிறுவனம் 100 சதவீத வேலை வாய்ப்பினை உறுதி செய்யுள்ளது. கொத்தனார், வெல்டர், பிளம்பர், மரவேலை, கம்பி வளைப்பவர், தச்சு வேலை ஆகிய தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
ஊக்க தொகையில் இருந்து உணவுக்கு பிடித்தம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் நலவாரிய அட்டை, கல்வித் தகுதி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புத்தகம் உள்ளிட்ட நகல்களுடன் தேனி, கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என, உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.