புதுச்சேரி : கிராமங்களில் பணியாற்ற டாக்டர்கள் தயங்கக் கூடாது என முதல்வர் ரங்கசாமி பேசினார்.
இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சமூக மருத்துவத்துறை சார்பில், கூட்டு மாநில மாநாடு, கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் விரிவான ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் நேற்று நடந்தது.
மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:-
வீடுதேடி டாக்டர்கள் செல்ல வேண்டும் என நான் கூறியிருந்தேன். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். வீதி, வீதியாக டாக்டர்களை நடக்கவிடுவதா என கேட்டனர். மருத்துவம் என்பது சேவை. சேவை செய்யத்தான் வந்துள்ளோம் என்பதை டாக்டர்கள் அறிந்துகொள்ள வேண்டும். வீடு, வீடாக மருத்துவம் செய்வதால் குறைந்துவிட மாட்டீர்கள். கிராமங்களில் பணியாற்ற டாக்டர்கள் முன்வர வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுமையாக செயல்பட மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இங்கு 2 டாக்டர்கள், 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அங்கேயே சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். இதற்காக அரசு அதிக அக்கறை எடுத்துள்ளது.
இதேபோல மருத்துவக்கல்லுாரிக்கு தேவையான பேராசிரியர்களை நியமித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் புதிய, புதிய துறைகளை கல்லுாரியில் தொடங்க முடியும்.
புதுச்சேரியில் மருத்துவ பல்கலைக்கழகம் அமையும்போது இதை எல்லோரும் பாராட்டுவார்கள். இந்தியா அளவில் மருத்துவ வசதி அதிகம் கிடைக்கும் இடமாக புதுச்சேரிக்கு விருது கிடைத்துள்ளது. ஆனால் எனக்கு திருப்தியில்லை.
இன்னும் சிறப்பான மருத்துவமும், வசதிகளும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
மாநாட்டில் ரமேஷ் எம்.எல்.ஏ., அரசு செயலர் உதயகுமார், பேராசிரியர் கவிதா வாசுதேவன், உதவி பேராசிரியர் சுரேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் புதுச்சேரி , தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், மருத்துவ அலுவலர்கள், சர்வதேச நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
காசநோய், தட்டம்மை ஒழிப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, தொற்றாத நோய்கள், புகையிலை கட்டுப்பாடு, நோய்தடுப்பு சிகிச்சை உட்பல பல தலைப்புகளில் விவாதம் நடத்தப்பட்டது.
மாநாட்டில் பட்டமேற்படிப்பு பட்டதாரிகளுக்கு வினாடிவினா, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.