வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மேற்கு வங்கம் போல, தமிழகத்திலும் சத்துணவுடன், கோழிக்கறி வழங்குவது குறித்து, அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மாணவ - மாணவியருக்கு, மதிய உணவுடன் வாரத்தில் ஒரு நாள் கோழிக்கறி மற்றும் பழங்கள் வழங்கப்படும் என, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த வாரம் அறிவித்துள்ளார்.
அதுபோல, தமிழகத்திலும் சத்துணவுடன், வாரத்தில் ஒருநாள் கோழிக்கறி வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1962-ல் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பள்ளி மாணவ - மாணவியருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. 1982-ல் எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, சத்துணவு திட்டம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டு, அதற்கென தனி துறை உருவாக்கப்பட்டது.
மீண்டும் முதல்வரான கருணாநிதி, சத்துணவில் முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தற்போது 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, ஆண்டுக்கு 220 வேலை நாட்களில் கலவை சாதம், முட்டை மசாலா வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழம் வழங்கப்படுகிறது. மதிய உணவு தவிர, வாரத்திற்கு ஒருமுறை, வேக வைக்கப்பட்ட கருப்பு கொண்டைக் கடலை அல்லது பச்சைப் பயறு வழங்கப்பட்டு வருகிறது.
பழனிசாமி முதல்வராக இருந்தபோது, 2019ல் 'அட்சய பாத்ரா' தொண்டு நிறுவனம் வாயிலாக, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணாதுரை பிறந்த நாளில், அரசு துவக்க பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தை போல, தமிழகத்திலும் 10-ம் வகுப்பு வரை சத்துணவுடன் வாரம் ஒருமுறை கோழிக்கறி வழங்க, அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பிராய்லர் கோழிப் பண்ணை உரிமையாளர்களுடன், சில அமைச்சர்கள் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருணாநிதி பிறந்த தினமான ஜூன் 3-ல் கோழிக்கறி வழங்கும் திட்டம் துவங்கப்பட இருப்பதாக, தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். அசைவம் சாப்பிடாத குழந்தைகளுக்கு, என்ன வழங்குவது என்பது தொடர்பாக, மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன், முதல்வர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.