விழுப்புரம் : கிராம ஊராட்சிகளில் வெளிப்படைத் தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி அடிப்படை வசதிகளை செய்து, வளர்ச்சி இலக்குகளை எட்டும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு, உத்தமர் காந்தி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி, அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து, நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு. 2022ம் ஆண்டு முதல் உத்தமர் காந்தி விருது மீண்டும் வழங்கப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதிற்கு விண்ணபிக்க ஊரக வளர்ச்சி துறையின் இணையதளத்தில், கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் பயனர் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி, நுழைவு செய்து கருத்துரு காரணிகளை தேர்வு செய்து, படிவத்தினை வரும் ஜன.17-க்குள் பதிவு செய்ய வேண்டும்.
மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்ட மொத்த கருத்துருக்களில் இருந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தலைமையில், இயக்குநர் அளவில் உள்ள உயர்மட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, பரிசீலனை செய்து மாவட்டத்திற்கு ஒன்று வீதம், மாநில அளவில் சிறந்த 37 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
ஆக.15ம் தேதி அல்லது ஏதேனும் ஒரு சிறப்பு தினத்தில், தமிழக முதல்வரால் தேர்வு செய்யப்பட்ட 37 கிராம ஊராட்சிகளுக்கு, உத்தமர் காந்தி விருதுக்கான கேடயம் மற்றும் ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.