சென்னை:சென்னை அடுத்த கொளப்பாக்கம் ஊராட்சியில், விமானம் தரையிறங்க இடையூறாக உள்ளதாக, 146 வீடுகளின் உயரத்தை குறைக்க, விமானத்துறை அதிகாரிகள் 'நோட்டீஸ்' அளித்துள்ளனர். இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு பகுதி, சென்னை விமான நிலையத்தை ஒட்டி உள்ளது. விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக, இங்குள்ள சில வீடுகளை அகற்றப் போவதாக, ஏற்கனவே விமான நிலைய அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
தற்போது, விமானம் தரை இறங்குவதற்கு இடையூறாக உள்ளதாக, கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 146 வீடுகளின் உயரத்தை குறைக்க வேண்டுமென, சென்னை விமான நிலைய அதிகாரிகள், கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
குறிப்பாக, இடத்திற்கு ஏற்றாற்போல ஒவ்வொரு வீடும், 15 அடி முதல் 30 அடி வரை உயரத்தைக் குறைக்க வேண்டுமென அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று, கொளப்பாக்கம் ஊராட்சித் தலைவர் மாலதி ஏசுபாதம் தலைமையில், விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக குடியிருப்புகளை எடுக்கக் கூடாது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, விமான நிலைய அதிகாரிகளுக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பரந்துாரில், புதிய விமான நிலையம் அமைய உள்ள நிலையில், இங்குள்ள குடியிருப்புகளின் உயரத்தை ஏன் குறைக்க வேண்டும்.
தொடர்ந்து வீட்டின் உயரங்களை குறைக்க வலியுறுத்தி வரும் விமானத்துறை அதிகாரிகள், அதற்கான இழப்பீடு தொகையை எவ்வாறு வழங்குவர் எனவும், அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து குடியிருப்புவாசிகளை அச்சுறுத்தும் பணியில் ஈடுபட்டால், பல்வேறு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். உயரத்தை குறைக்க அதிகாரிகள் வலியுறுத்தும், 146 வீடுகளில், ஊராட்சித் தலைவரின் வீடும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.