கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும், என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.
ஆனால் தற்போது, போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர், டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.
இதனால் வெளியாகும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. எனவே போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.