உடுமலை:உடுமலை பகுதிகளில், தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில், பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டதால், கடை வீதிகள் களை கட்டியது.
உடுமலை பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், உழவர் திருநாள் திருவிழாவான, பொங்கல் திருநாள், கிராமங்களில் மட்டுமன்றி, நகரங்களிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வரும், 15 முதல், 17 வரை, பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாளை போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாதம் முதல், பாரம்பரிய முறையில், மாக்கோலமிட்டு, பிள்ளையார் பிடித்து, பூசணி பூ வைத்து வழிபட்டு வந்தனர். ஒரு சில கிராமங்களில், பாரம்பரியமாக, ஊருக்கு பொது காளையாக உள்ள சலகெருதுகளுடன் விளையாட்டு, கும்மியாட்டம் என, உருமி இசையுடன், மார்கழி மாத, பனி இரவுகளில் கொண்டாட்டங்கள் களை கட்டியது.
கோலாகலம்
மேலும், பெரும்பாலும் கிராமங்களிலுள்ள வீடுகள், தோட்டத்துசாளைகளில், சுண்ணாம்பு மற்றும் பெயின்ட்கள் அடித்து புதுப்பொலிவு பெற்றுள்ளது.
மாடுகள், ரேக்ளா மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் அழகுபடுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.
தை மாதம் பிறப்பதற்கு முன்தினம், பழையன கழிதலும், புதியன புகுதலும் என, உற்சாகமாக, தை மகளை வரவேற்கும் விதமாக, வீடுகளில், வேப்பிலை, பூளைப்பூ, ஆவாரம்பூ கொண்டு, காப்பு கட்டப்பட்டு, மாவிலை தோரணங்கள் கட்டியும், வண்ண கோலமிட்டு வரவேற்கும் வகையில், நாளை மாலை காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன், பொங்கல் பண்டிகை துவங்குகிறது.
இதற்காக, ஆவாரம் பூ, பூளைப்பூ ஆகிய விற்பனை கடைகள், உடுமலையின் பிரதான ரோடுகளில் அமைக்கப்பட்டிருந்தது.
தை முதல் நாள் (வரும் 15ம் தேதி), உலகிலுள்ள உயிரினங்களில் வாழ்விற்கு ஆதாரமாக உள்ள இயற்கைக்கும், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாக்கோலமிட்டு, வாசல்களில் புத்தரிசி, வெல்லம் கொண்டு, பொங்கலிடப்படுகிறது.
அடுத்த நாள், (16ம் தேதி) விவசாயத்துக்கு உறுதுணையாக உள்ள கால்நடைகளை சிறப்பிக்கும் விதமாக மாட்டுப்பொங்கலும், மூன்றாவது நாள் (17ம் தேதி), உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடும் விழாவாகவும், நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பூப்பறிக்கும் நோன்பு, காணும் பொங்கல் விழா நடக்கிறது.
பொங்கல் பண்டிகைக்கு தேவையான, பொருட்கள் வாங்க, உடுமலை, ராஜேந்திரா ரோடு, சீனிவாசா வீதி, பஸ் ஸ்டாண்ட், கல்பனா ரோடு என பெரும்பாலான கடைவீதிகளில் பொதுமக்கள் திரண்டனர்.
கிராமங்களிலிருந்தும் ஏராளமான மக்கள், பொங்கல் பொருட்கள், காய்கறிகள் மற்றும் புத்தாடைகள் வாங்கவும் கூடியதால், உடுமலை கடை வீதிகள் களைகட்டியது.
புத்தரிசியிட்டு, பொங்கல் கொண்டாட, மண் மற்றும் உலோகங்களால் செய்யப்பட்ட, பொங்கல் பானைகள் விற்பனை அமோகமாக நடந்தது.
பாரம்பரிய முறையில், மண் பானை, மண்ணினால் செய்யப்பட்ட அடுப்பு, தட்டு, தேங்காய் தொட்டியால் செய்யப்பட்ட அகப்பை என கடைகளில், மக்கள் திரண்டனர்.
மேலும், இனிப்பான பண்டிகையாக கொண்டாட, தோகையுடன் கூடிய முழுக்கரும்பு, பொங்கல் பானையில் கட்ட மஞ்சள் கொத்து மற்றும் பூ, மாலைகள் வாங்கிச்சென்றனர்.
வண்ணமயமான பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு, வீடுகளில் கோலமிட, பல வண்ண கலர் கோலப்பொடிகளும், மாடுகளுக்கு புதிதாக அணிவிக்க, கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறு, பிடி கயிறு என கால்நடைகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனையும் அதிகளவு காணப்பட்டது.
உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட, தயாராகி வருகின்றனர்.