திருச்சி:'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று கோரி, சாலையில் போராடிய விவசாயிகளை, திருச்சி கலெக்டர், அலுவலத்துக்கு நடந்தே அழைத்துச் சென்று பேச்சு நடத்தினார்.
தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், நேற்று காலை, திருச்சி கலெக்டர் அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அலுவலகத்துக்கு காரில் வந்த கலெக்டர் பிரதீப்குமார், காரில் இருந்து இறங்கி, விவசாயிகளிடம் சென்று, போராட்டம் குறித்து கேட்டார். விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
உடனே, ''சாலையில் நின்று பேச வேண்டாம்; அலுவலகம் வாருங்கள்; அங்கு பேசிக் கொள்ளலாம்,'' என்று கூறினார்.
அதனால், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, கலெக்டர் அலுவலகத்துக்கு நடந்து சென்றனர்.
காரை அனுப்பி விட்டு, கலெக்டரும் விவசாயிகளுடன் நடந்தே சென்று, அலுவலகத்தில் விவசாயிகளுடன் பேசினார்.
கலெக்டரின் எளிமையான அணுகுமுறையை பார்த்த விவசாயிகளும், கலெக்டர் அலுவலக பணியாளர்களும் ஆச்சர்யமடைந்தனர்.