ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீனவர்கள் வலையில் பல டன் சூடை, காரல் மீன்கள் சிக்கின. தடை செய்யப்பட்ட வலையால் பிடிக்கப்பட்டதா என மீன்துறையினர் விசாரிக்கின்றனர்.
கடல் வளம், மீன் வளத்தை அழிக்கும் இரட்டை மடி, சுருக்கு மடியில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்தது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் தடை செய்யப்பட்ட இரட்டை மடியில் கடந்த ஆண்டில் மீன் பிடித்தனர். இதனால் கடலோர சிறு தொழில் மீனவர்களுக்கு மீன்வரத்து இன்றி நஷ்டம் ஏற்படுவதால் தடை செய்த வலையில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜன.11ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று நேற்று கரை திரும்பிய மீனவர்கள் வலையில் பல டன் கணக்கில் சூடை, காரல் உள்ளிட்ட பல வகை மீன்கள் சிக்கின. இதனை வியாபாரிகள் வாங்கி கோவை, கேரளா மீன் மார்க்கெட்டுக்கு அனுப்பினார்கள்.
இந்நிலையில் மீன்களை இரட்டை மடி பயன்படுத்தி பிடித்துள்ளனர். இதனால் கடலோர மீன் வரத்து இருக்காது. இரட்டை மடி படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கடலோர சிறு தொழில் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீன் துறையினர் விசாரிக்கின்றனர்.