மதுரை:'சிவகங்கை சிங்கம்புணரி மல்லாக்கோட்டை கிராமத்தில், கோவில்களில் தைப்பொங்கல் விழாவில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க கூடாது; அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது.
சிவகங்கை பாலசுந்தரம் தாக்கல் செய்த மனு:
எங்கள் பகுதி கோவில் விழாவின் போது, யாருக்கும் முதல் மரியாதையோ அல்லது கோவில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு மரியாதைகளோ செய்யப்படாது. ஆனால், சில ஆண்டுகளாக சசிபாண்டிதுரை என்பவர் தனக்கு முதல் மரியாதை, சிறப்பு மரியாதைசெய்யுமாறு கூறி வருகிறார்.
விழாவின் போது, அவருக்கு தலைப்பாகை கட்டி, கையில் குடை ஏந்தியவாறு அவரது அடியாட்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்கிறார்.
பல்வேறு சமூகத்தினர் ஒன்றாக இணைந்து கொண்டாடும் இவ்விழாவில், அவருக்கு மட்டும் சிறப்பு மரியாதை வழங்குமாறு பூஜாரிகளை வற்புறுத்துகிறார். இது ஏற்கத்தக்கது அல்ல; தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
இதுபோன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு புதிதல்ல. உயர் நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களை ஏற்கனவே பிறப்பித்துள்ளது. கோவிலுக்குள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை, குடை பிடிப்பதோ கூடாது. அனைத்து பக்தர்களும் சமமாகவும், சம மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும்.
அதுபோல, யாரும் சிறப்பு மரியாதை வழங்குமாறு வற்புறுத்தவும் கூடாது. விழாவை அமைதியான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.