ஊட்டி:நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் அன்னிய மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
மாநில முழுவதும் வனப்பரப்பை, 33 சதவீதமாக அதிகரிக்க, 2.60 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வனத்துறை மூலம் நடந்து வருகிறது.
மறுபுறம், 65 சதவீதம் வனம் சூழ்ந்த பகுதியான நீலகிரியில், கற்பூரம், சீகை, உண்ணி செடி உள்ளிட்ட அன்னிய மரம் அதிகரித்துள்ளதால், வன விலங்குகளுக்கான தாவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுஉள்ளது.
இந்நிலையில், நீலகிரியில் உள்ள கற்பூரம் உள்ளிட்ட அன்னிய மரங்களை அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.
தொடர்ந்து, நீலகிரி வனத்துறை சார்பில், கோத்தகிரி, ஊட்டியில் தலைகுந்தா, துானேரி, கிளன்மார்கள் உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாக, 100 ஏக்கர் பரப்பில் அன்னிய மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
உதவி வனப்பாதுகாவலர் சரவணன் கூறுகையில்,''நீலகிரியில் அன்னிய மரங்கள் அகற்றும் பணிகள், கோத்தகிரி, ஊட்டியில் நடந்து வருகிறது. படிப்படியாக மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் அன்னிய மரங்களை அகற்றும் பணி துரிதப்படுத்தப்படும்,'' என்றார்.