எருமப்பட்டி, ஜன. 13--
எருமப்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், மல்லிகை பூ உற்பத்தி பாதிக்கப்பட்டு, நேற்று நடந்த ஏலத்தில் கிலோ, 2,000 ரூபாய்க்கு விற்பனையானது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியை சுற்றியுள்ள அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, நவலடிப்பட்டி, செவ்வந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டு மல்லிகை பூ செடிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்த மல்லிகை பூ செடிகளை,பட்டம் மாறுவதற்காக, விவசாயிகள் கடந்த மாதம் வெட்டி விட்டனர். இதனால் இப்பகுதிகளில் இருந்து, மிக குறைந்த அளவிலேயே மல்லிகை பூ செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு, பூ ஏலத்துக்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் கடந்த 4 நாட்களாக மல்லிகை பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால், நேற்று கிலோ மல்லிகை பூ, 2,000 ரூபாய் வரை ஏலம் போனது.
இது குறித்து, எருமப்பட்டி பகுதியில், மல்லிகை பூ செடி பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:
மல்லிகை பூ செடிகள் பட்டம் மாறுவதற்காக கடந்த மாதம் வெட்டிவிடப்பட்டது. தற்போது, செடிகள் பூக்கும் நிலைக்கு வராமல் உள்ளன. மேலும், இந்த பகுதியில் பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால், கடந்த 4 நாட்களாக மல்லிகை பூ வரத்து முற்றிலும் குறைந்தது. கடந்த மாதம் வரை, ஏக்கருக்கு, 5 கிலோ வந்த மல்லிகை பூக்கள், தற்போது ஒரு கிலோ பூ கூட வரவில்லை. இதனால், நேற்று வெளியூரில் இருந்து வந்திருந்த பூ வியாபாரிகள் கிலோ மல்லிகை பூ, 2 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து சென்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.