குமாரபாளையம், ஜன. 13- -
''நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தஞ்சை வரை செல்லக்கூடிய காவிரி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுகொண்டு உள்ளனர்,'' என, நாமக்கல் எம்.பி., சின்ராஜ் கூறினார்.
குமாரபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகள் மற்றும் புறவழிச்சாலையில், நாமக்கல் எம்.பி., சின்ராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் சாய ஆலைகளை ஆய்வு செய்தேன். இதில் விதி மீறிய சாய ஆலைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு, சாய ஆலைகள் மூடுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பள்ளிபாளையம் பகுதியில் பொங்கல் விழா முடிந்து ஆய்வு செய்ய உள்ளேன்.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தஞ்சை வரை செல்லக்கூடிய காவிரி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுகொண்டு உள்ளனர். இரண்டு மாதம் முன்பு ஆய்வு செய்து, 45 சாய ஆலைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த நடவடிக்கைகள் அதிகாரிகள் சரியாக செய்து உள்ளனரா என ஆய்வு செய்ய வந்ததில், பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதை திருத்தம் செய்ய வேண்டும் என சாய ஆலை அதிபர்களுக்கும், அதிகாரிகளுக்கும்
உத்திரவிட்டுள்ளேன்.
ரூ.46 கோடியில் மேம்பாலம்
சேலம் கோவை புறவழிச்சாலை, குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே பிரிவு சாலையில் அதிக விபத்துக்கள் நடந்து வருவதால், மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரியை நேரில் சந்தித்து, இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தேன். தற்போது அமைச்சர் உத்திரவின்படி, இந்த இடம் மதிப்பீடு செய்யப்பட்டு, 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. ஒரு மாத காலத்தில் டெண்டர் விடப்பட்டு, மார்ச் மாத முடிவில் பணி துவங்கும். அதிலிருந்து 7 மாத கால அளவில் பாலம் பணிகள் நிறைவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.