சேலம்: பெண்ணை பலாத்காரம் செய்ததாக, சிறை வார்டன் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், அழகாபுரத்தை சேர்ந்த, 20 வயது பெண் நேற்று முன்தினம் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்:
சேலம் மத்திய சிறையில் வார்டன்களாக பணிபுரியும் இருவர், சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாதுகாப்பு வழங்கினர். அப்போது நான் சிகிச்சைக்கு சென்ற நிலையில் அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறை வளாக குடியிருப்புக்கு அழைத்துச்சென்று, என்னை பலாத்காரம் செய்தனர். அப்போது போட்டோ, வீடியோ எடுத்தனர். அதை வைத்து மிரட்டி என்னை தொடர்ந்து பலாத்காரம் செய்ய முயற்சிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து உதவி கமிஷனர் லட்சுமிபிரியா தலைமையில் போலீசார் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
மத்திய சிறை வார்டன்களாக பணிபுரியும், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துாரை சேர்ந்த முருகன் மகன் அருண், 30, சேலம் மாவட்டம் உத்தமசோழபுரத்தை சேர்ந்த ராஜூ மகன் சிவசங்கர், 31, ஆகியோர், பெண்ணை பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிந்தது. இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். சிறை குடியிருப்பில் சிவசங்கர் குடும்பத்துடனும், அருண் தனியாகவும் வசிக்கின்றனர்.
இவர்கள், அந்த பெண்ணிடம், 'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்டவை மூலம் பழக்கத்தை தொடர்ந்தனர். இதன்மூலம் அந்த பெண்ணை சிறை குடியிருப்புக்கு அழைத்து சென்று, அங்கு காலியாக உள்ள வீட்டில் வைத்து, பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி கடந்த ஆண்டு ஜூன், 20 முதல், கடந்த ஜன., 4 வரை, பலமுறை இதுபோல் நடந்து கொண்டனர். இதனால், அருண், சிவசங்கருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின் இருவரும் கைது செய்யப்பட்டனர். போலீசாரிடம் இருந்து அறிக்கை பெற்று, 2 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார் அளித்த பெண், ஓமலுாரில், 2017ல் பஸ் டிரைவர், கண்டக்டரால் கூட்டு பலாத்காரத்துக்கு ஆளானவர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.