
குரல் மாற்றி ஒலியெழுப்பும் இரட்டைவால் குருவி
பறவைகளுக்கு அதன் ஒலி முக்கியமானதாகும்
உற்சாகமாய்ப் பாட,இருப்பிடத்தை உணர்த்த,எதிரிகளிடமிருந்து தப்பிக்க எச்சரிக்க என்று தனது ஒலியை விதவிதமாகப் பயன்படுத்தும்

அதிலும் தனது இனத்திற்கு ஒரு ஆபத்து எனும்போது அது எழுப்பும் பொதுவான ஒலியானது மற்ற பறவைகளையும் உஷார்படுத்திவிடும்
ஒவ்வொரு பறவைக்கும் அதன் ஒலி வித்தியாசமானதாக இருக்கும் இதில் இரட்டை வால் குருவிக்கு என்று ஒரு தனி ஒலி உண்டு அதே நேரம் இந்த இரட்டைவால் குருவி மற்ற சில பறவைகளைப் போல குரலை மாற்றி சப்தமிடும் ஆற்றலும் உண்டு என்கிறார் பல ஆண்டுகளாக சிறு பறவைகளை படம் எடுத்துவரும் புகைப்பக்கலைஞர் ஆர்.என்.சுந்தர்ராஜன்.

வேலுரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் அடிப்படையில் ஒரு பிசினெஸ்மென் இவரது மன மகிழ்ச்சிக்காக நீண்ட காலமாக புகைப்படம் எடுத்துவருகிறார்.ஆக்பா கிளிக் என்ற அடிப்படைக்கேமிரா காலத்தில் இருந்து படமெடுத்துவரும் இவர் பறவைகளைப் பற்றி அருள் என்பவர் மூலம் புரிந்து கொள்ள ஆரம்பித்ததும் அதிலேயே அதிக கவனம் செலுத்திவருகிறார்.

இவர் தான் எடுத்த பறவைகளைப் பற்றிய குறிப்புகளை ஆங்கிலத்தில் மட்டுமின்றி அந்த பறவையின் சரியான தமிழ்ப் பெயரையும் ( உதாரணத்திற்கு பனங்காடை,பூங்குயில்,மரகதப்புறா,புள்ளி ஆந்தை,வெள்ளைக்கண் அவுரி,புதர்ச்சிட்டு,சிவப்பு சில்லை) அது பற்றிய குறிப்புகளையும் தமிழிலேயே வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார் இதற்கு காரணம், மாணவர்கள் இயற்கை, பறவை பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.அதே போல ஆந்தைகளின் பல இனங்களை பலவிதமாக படம் எடுத்துள்ளார்.

பொதுவாக சிறு பறவைகளை படம் எடுப்பது என்பது ரிஸ்க்கான விஷயம் மட்டுமல்ல மிகவும் பொறுமை தேவைப்படும் விஷயமுமாகும்.இதற்காக நீண்ட துாரம் நடக்க வேண்டும் அதைவிட நீண்ட நேரம் பொறுமையாக காத்திருக்கவேண்டும் ஆனால் அந்த காத்திருத்தலும் சிரமங்களும் எடுத்த படங்களைப் பார்க்கும் போது சாதாரணமாகிவிடும் என்கிறார்.

பறவைகளைப் பற்றி படிப்பதும் தெரிந்து கொள்வதும் மிக சுவராசியமான விஷயமாகும்,தனது இணையை சந்தோஷப்படுத்துவதற்காக காற்றில் நடனமாடுவது உள்ளீட்ட பல விஷயங்களில் ஈடுபடும்,அதே போல பறவைகள் மிகவும் சென்சிடிவானவை .தான் மறைவாக கஷ்டப்பட்டு கட்டும் கூடு எதிரிக்கு தெரிந்துவிட்டது என்றால் அடுத்த நொடியே அந்தக் கூட்டை நிராகரித்துவிட்டு வேறு இடத்தில் கூடு கட்டத்துவங்கிவிடும்

பறவைகளை படம் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அதன் இயல்பான சூழலில் அதனைத் தொந்தரவு செய்யாமல் எடுப்பது முக்கியமானதாகும் பறவைகளை பார்க்க பார்க்க அதனுடன் பழகப்பழக அதன் வாழ்வியலில் உள்ள பல ஆச்சரியங்கள் நம்மை அதிசயப்படவைக்கும் அந்த பாக்கியம் எனக்கு கிடைத்து வருகிறது மேலும் அதனை படம் எடுக்கும் போது மனம் பரவசப்படுகிறது அமைதியடைகிறது அளவில்லாத ஆனந்தமும் ஏற்படுகிறது என்கிறார்.
அவருடன் தொடர்பு கொள்வதற்கான மெயில் முகவரி:mail@sundar.co
-எல்.முருகராஜ்