குளித்தலை, ஜன. 13-
காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில், கூலி ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் அதிக வாடகை கொடுத்து இயந்திரம் மூலம் அறுவடை பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியான குளித்தலை மற்றும் தோகைமலை, கடவூர் யூனியன் பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
காவிரி, கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் குளித்தலை, கோட்டமேடு, பரளி, தண்ணீர்பள்ளி, மேட்டுமருதுார், வலையப்பட்டி, பணிக்கம்பட்டி, இனுங்கூர், நச்சலுார், நெய்தலுார், நங்கவரம், முதலைப்பட்டி, சூரியனுார் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. தோகைமலை, கடவூர் யூனியன் பகுதிகளிலும் சம்பா நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ளன.
இந்நிலையில் கட்டளை மேட்டு வாய்க்கால் சுற்று பகுதி மற்றும் கிணற்று பாசனம் மூலம் பயிரிட்ட விளை நிலங்களில் நெல் அறுவடைக்கு, கூலி ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கும், அறுவடை இயந்திரம்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்ய ஒரு மணி நேரத்துக்கு ரூ. 3 ஆயிரம் வாடகை செலுத்த வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,250 வாடகை பெறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வாடகை அதிகரித்துள்ளது.
தற்போது, டீசல் விலை ஏற்றத்தால், வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாக நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள், விவசாயிகளிடம் தெரிவித்து வருகின்றனர். கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அதிக வாடகை செலுத்தி இயந்திரம் மூலம் அறுவடை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.