உடுமலை:உடுமலை அருகே, மலைவாழ் மக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில், மலையடிவாரத்தில் காத்திருப்பு மையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனச்சரக பகுதியில், ஈசல் திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மருத்துவம், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க, இப்பகுதி மக்கள் உடுமலை வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் நோயாளிகள், மலையடிவாரத்திலுள்ள ஜல்லிபட்டி, உடுமலை அரசு மருத்துவமனை மற்றும் எரிசனம்பட்டி முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டியதுள்ளது.
போக்குவரத்து வசதியில்லாத நிலையில், மலைவாழ் மக்கள் ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை வழியாக, வனப்பகுதியில், 7 கி.மீ., துாரம் கரடு முரடான மலைப்பாதையில், குடியிருப்புக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே, மலைவாழ் மக்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையிலும், பொருட்கள் வாங்கி விட்டு மேலே மலை பாதையில் நடந்து செல்வதற்கு ஓய்வெடுக்கும் வகையில், மலையடிவாரமாக உள்ள கொங்குரார்குட்டை அல்லது ஜல்லிபட்டியில் உரிய வசதிகளுடன் கூடிய காத்திருப்பு மையம் அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.