உடுமலை:பருவமழை பொழிந்து, விளைநிலமெல்லாம் பசுமைக்கு திரும்பி, விளைபொருளை அறுவடை செய்து, விவசாயத்துக்கு உறுதுணையாக இருந்த இயற்கைக்கு, நன்றி சொல்லும் தைத்திருநாளை, உற்சாகத்துடன் உடுமலை பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், பிரதானமாக உள்ள விவசாயத்துக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் ஆதாரமாக உள்ளன.
கடந்த சீசனில், பருவமழை பொழிவு சிறப்பாக இருந்தது; அமராவதி அணை உட்பட நீர்நிலைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பி.ஏ.பி., பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
மழைப்பொழிவு மற்றும் அணையிலிருந்து தண்ணீர் திறப்பால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, பல ஆயிரம் ஏக்கரில், காய்கறி உள்ளிட்ட அனைத்து சாகுபடி பரப்பும் அதிகரித்துள்ளது. மண்டல பாசனத்துக்கு சாகுபடி செய்யப்பட்ட, மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
நெல், கரும்பு, வாழை மற்றும் தென்னை என அனைத்து சாகுபடிகளும், மழையால், மாற்றம் பெற்றுள்ளன. இவ்வாறு, திரும்பிய பக்கமெல்லாம், பசுமையாக மாறி கண்களை குளிர்விக்கிறது.
இவ்வாறு, விவசாயம் செழிக்க, உறுதுணையாக இருந்த இயற்கைக்கு நன்றி சொல்லும் தைத்திருநாள் கொண்டாட்டங்கள் உடுமலை பகுதியில் களை கட்டியுள்ளது.
இன்று காப்புக்கட்டு
தைத்திருநாளை, வீடுகளில் காப்புக்கட்டி மக்கள் வரவேற்கின்றனர். மாவிலை, ஆவாரம், பூளைபூ, வேப்பிலை உள்ளிட்டவற்றை கொண்டு, வீடுகளின் முகப்பிலும், விளைநிலங்களிலும், கால்நடைகளை பராமரிக்கப்படும் பட்டிகளிலும் காப்பு கட்டுகின்றனர். பருவமழைக்குப்பிறகு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த, விழிப்புணர்வு ஏற்படுத்த இம்முறையை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். காப்பு கட்டியதும், தைத்திருநாள் கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கி விடும்.
கிராமங்களில், மாட்டு பொங்கலை கொண்டாட விளைநிலங்களில், பட்டி கட்டி தயாராக வைத்துள்ளனர். தைத்திருநாளை வரவேற்கும் கொண்டாட்டங்கள் உடுமலை பகுதியில் களைகட்டியுள்ளது. கோவில்களிலும், பொங்கலையொட்டி, சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சலகெருது வீதியுலா
கிராமங்களில், பராமரிக்கப்படும் சலகெருதுகளை மார்கழி மாதம் முழுவதும், இரவு நேரங்களில், ஆடி பழக்கப்படுத்துகின்றனர். பொங்கலன்று, சலகெருதுகளை அலங்கரித்து, வீடுதோறும் அழைத்து சென்று சிறப்பு பூஜை செய்கின்றனர்.
பின்னர், பொது இடத்தில், சலகெருது நலனுக்காக பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். இவ்வாறு, கிராம வீதிகளில், சலகெருது வீதியுலா தனிச்சிறப்புடன் நடைபெற்று வருகிறது.
உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பழமை வாய்ந்த ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது. பொங்கலையொட்டி, மூன்று நாட்கள் நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.கால்நடை வளம் பெருகவும், அவற்றுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படவும், உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்கின்றனர்; சுவாமிக்கு பாலாபிேஷகம் செய்து வழிபடுகின்றனர். கோவிலில், வரும் 16ம் தேதி தமிழர் திருநாள் திருவிழா துவங்குகிறது. அன்று அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம், தீபாராதனையுடன் விழா துவங்குகிறது. பகல், 11:00 மணிக்கு, சிறப்பு பூஜையும், மாலை, 6:00 மணிக்கு, உழவர் திருநாள் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.வரும், 17ம் தேதி, பகல், 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும், வரும் 18ம் தேதி, அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம்; மாலை, 6:00 மணிக்கு மகா அபிேஷகம், இரவு, 7:00 மணிக்கு மகா தீபாராதனை, இரவு, 9:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா, வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.