சிக்கமகளூரு,-மழையால் இடிந்த பாலம் சீரமைப்பு பணியால் தரிகெரே -தொட்டகரே சாலையில் 10 நாட்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் ரமேஷ் கூறியுள்ளார்.
சிக்கமகளூரு மாவட்டம் தரிகரே அருகே உள்ள தொட்டகரே பகுதியில் 2021ல் பெய்த கனமழையில் மேம்பாலம் ஒன்று இடிந்தது. இந்த மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகள் துவங்க உள்ளது. இதனால் அந்த பகுதிகளில், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரமேஷ் கூறியதாவது:
சிக்கமகளூரு மாவட்டம் தரிகரே தாலுகா தொட்டகரே பகுதியில், 2021ல் பெய்த கன மழையில் பாலம் சிதிலமடைந்து காணப்பட்டது. தற்போது அந்த பாலம் முழுவதும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை சீரமைக்கும் பணிகளை துவங்க, மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது.
இதன்படி கடந்த 11ம் தேதி முதல் பணிகள் துவங்கியது. வரும் 21ம் தேதி வரை இப்பணிகள் நடைபெறும். அதுவரை தரிகரே தொட்டகரே வழியாக வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக இரேகரே, தர்மாபுரா கிராமத்தின் வழியாக செல்லும் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். பணிகள் முடிந்ததும் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.