சிவகாசி,--சிவகாசி மாநகராட்சியில் தண்ணீர் செல்லும் ஓடைகள், வரத்து கால்வாய்கள் துார்வாரப்படாததால் கழிவுகள் தேங்கி விடுகிறது. சிறிய மழை பெய்தாலும் கழிவுநீர் ரோட்டில் ஓடி பெரும் சிரமத்தினை ஏற்படுத்துகிறது.
சிவகாசியில் சிறுகுளம், பெரியகுளம், செங்குளம் ஆகிய கண்மாய்கள், பொத்தமரத்து ஊரணி உள்ளது. இந்த நீர்நிலைகளுக்கு செல்கின்ற ஓடைகள், வரத்து கால்வாய்கள் துார்வாரப்படாமல் மண் மேவி கிடப்பதால் மழை நீர் ஓடி வர வாய்ப்பில்லை. நகருக்குள் கிருதுமால் ஓடை 2 கி.மீ., நீளமுள்ளது.
இந்த ஓடை சிறுகுளம் கண்மாயிலிருந்து காமராஜர் சிலை, முஸ்லிம் ஓடைத்தெரு, மருதுபாண்டியர் தெரு, அம்பேத்கர் மணிமண்டபம், டாக்ஸி ஸ்டாண்டு, காந்தி ரோடு வழியாக நகரை விட்டு வெளியேறி மீனம்பட்டி கண்மாய் செல்கிறது. அங்கிருந்து அர்ஜூனா நதியில் கலக்கும்.
மருத நாடார் ஊரணியிலிருந்து வரும் கால்வாய் அம்மன்கோவில் பட்டி வழியாக சென்று பொத்தமரத்து ஊரணியில் கலக்கிறது.
இதேபோல் நாரணாபுரம் ரோட்டிலிருந்து வருகின்ற ஓடை கிருதுமால் ஓடையில் சேர்கிறது. எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி அருகிலிருந்து காரனேசன் காலனி, நேஷனல் காலனி, தீயணைப்பு நிலையம் வழியே வந்து மருதுபாண்டியர் தெரு வழியாக கிருதுமால் ஓடையில் இணைகிறது.
அய்யனார் காலனி, சசி நகர் வழியாக அண்ணாமலை நாடார் உண்ணாமலையம்மாள் பள்ளி பின்புறம் உள்ள கால்வாய் வழியாக சென்று விஸ்வநத்தம் ரோடு வழியாக கிருதுமால் ஓடையில் கலக்கிறது.
இந்த ஓடைகள் அனைத்துமே 15 வருடங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டு துார்வாரப்பட்டது. ஓடையில் சிறுவர்கள் விளையாடும் அளவிற்கு இடமிருந்தது.
மழைக்காலங்களில் தண்ணீர் எந்த தடையுமின்றி வெளியேறி கண்மாய், ஊரணியில் சேர்ந்தது. ஆனால் தற்சமயம் ஓடை முழுவதும் கோரைப்புற்கள், பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பியுள்ளது. இவைகளில் ஒரு சில பகுதிகளில் மட்டும் துார்வாரப்பட்டுள்ளது.
துார்வாரப்படாத பகுதிகளில் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றத்தினை ஏற்படுத்துவதோடு சுகாதார கேட்டினையும் ஏற்படுத்துகிறது.
மழைக் காலங்களில் தண்ணீர் ஓட வழியில்லாமல் ஓடையிலிருந்து வெளியேறி சாக்கடையாக மாறி ரோடு, குடியிருப்பு பகுதிகளில் ஓடுகிறது. நகரில் கொட்டப்படுகின்ற குப்பைகள் மட்டுமே அவ்வப்போது மாநகராட்சியால் அகற்றப்படுகிறது. ஆனால் இதுபோன்ற ஓடைகள் கண்டுகொள்ளப்படவில்லை. எனவே சிவகாசி நகரிலுள்ள அனைத்து ஓடைகளும் துார்வாரப்பட வேண்டும்.