சிங்கம்புணரி,--சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டு காளைகளுக்கான சலங்கைகள் தயாரிப்பு மும்முரமாக உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு காளைகளுக்கு அலங்கார சலங்கைகள் அணிவிப்பது வழக்கம். சிங்கம்புணரியில் தயாரிக்கப்படும் சலங்கைகளுக்கு சுற்றுவட்டார மாவட்டங்களில் நல்ல கிராக்கி உள்ளது. இந்த சலங்கைகளை தலைமுறையாக சில குடும்பத்தினர் தயாரிக்கின்றனர். முன்னர் பிடிபடாத காளைகளுக்கு மட்டுமே சலங்கைகளை அணிவிப்பர்.
திடலில் மணி மாடு வருகிறது என்றால் வீரர்கள் ஒதுங்கி விடுவர். தற்போது அனைத்து மாடுகளுக்கும் சலங்கைகளை அணிவிப்பதால் சலங்கை தொழில் விரிவடைந்துள்ளது. இதற்கான நூல் குஞ்சங்களை தயாரிக்கும் பணியில் பெண்களும் ஈடுபடுகின்றனர்.
ஆனந்த், சலங்கைத் தொழிலாளி: 4வது தலைமுறையாக சலங்கை தயாரிக்கிறோம்.ஆண்டு முழுவதும் தயாரித்தாலும் கார்த்திகை முதல் தை வரை மட்டுமே தொழில் பிஸியாக இருக்கும்.
1800 முதல் 15,000 ரூபாய் வரை கட்சி, ஜாதி அமைப்புகளுக்கு ஏற்ற வண்ணங்களில் தயாரித்து கொடுக்கிறோம். 4,6,8 அறுவை கொண்ட சாதா மணிகள், கும்பகோணம் மணிகள் உள்ளன.
100 ஆண்டுகளுக்கு முன்பு செட்டிநாட்டு வீடுகளில் அலங்காரத்திற்கு பயன்பட்ட அரியக்குடி மணிகளும் புழக்கத்தில் உள்ளன. அவை ஒரு மணி ஆயிரம் ரூபாய் வரை விலை போகும்.அந்த சலங்கையிலிருந்து வரும் நாதம் மஞ்சுவிரட்டு ஆர்வலர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும்.
இதன் விலை அதிகம். ஆனாலும் பலர் காளைகளுக்கு செலவு செய்வதைபெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. புதிய சலங்கை மட்டுமல்லாமல் பழைய சலங்கைகளையும் புதுப்பித்து கொடுக்கிறோம், என்றார்.